Tamilnadu

“எங்கள காப்பாத்துங்க”: கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட சிறுமி.. பா.ம.க நிர்வாகி மீது நடவடிக்கை- பின்னணி என்ன?

செங்கல்பட்டு அருகே 17 வயது சிறுமி ஒருவர் வெளியிட்ட வீடியோ தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த வீடியோவை யாரும் பகிர வேண்டாம் எனவும் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே உள்ள பெருமாள்சேரி கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், அவரது 15 வயது தங்கைக்கும், குடும்பத்தாருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பா.ம.க நிர்வாகி ஒருவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

மேலும், ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் நீங்கள் ஏன் வெளியே வருகிறீர்கள் எனக் கேட்டு தூங்கிக் கொண்டிருக்கும்போதே தீ வைத்து வீட்டைக் கொளுத்தி விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

இதனால் விரக்தியடைந்த அந்த சிறுமிகள் தற்கொலை செய்து கொள்வதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டனர். இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வீடியோ வைரலானதையடுத்து, போலிஸார் சிறுமியின் வீட்டுக்குச் சென்று விசாரித்தனர். பின்னர் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது போக்ஸோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், சிறுமிகளையும் அவர்களது குடும்பத்தாரையும் தொடர்ந்து துன்புறுத்தி வந்த பா.ம.க நிர்வாகி தினேஷ் குகன், எல்லப்பன், கோபாலகிருஷ்ணன் ஆகிய மூவரையும் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை நடந்து வருவதாகவும், சிறுமிகளின் வீடியோக்களை யாரும் பகிரவேண்டாம் என்றும் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Also Read: பா.ஜ.க நடத்திவரும் சட்டவிரோத நன்கொடை வசூல்... RTI மூலம் அம்பலமான மாபெரும் முறைகேடு!