Tamilnadu

கோகுல்ராஜ் ஆணவப்படுகொலை வழக்கு : யுவராஜூக்கு ஆயுள் தண்டனை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. பின்னணி என்ன?

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ், வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்த நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் 23 அன்று மாயமானார். இதுதொடர்பாக, திருச்செங்கோடு போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்த வந்த நிலையில், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜின் ஆட்கள் கோகுல்ராஜை கடத்தியதாக கூறப்பட்டது. பின்னர், கிழக்கு தொட்டிப்பாளையம் ரயில் பாதை அருகே கோகுல்ராஜ் சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்பட 11 பேர் திட்டமிட்டு கோகுல்ராஜை ஆணவக்கொலை செய்து, உடலை ரயில் தண்டவாளத்தில் போட்டுவிட்டதாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், நீதிமன்றம் கடந்த 5ஆம் தேதி தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் 11 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என மதுரை சிறப்பு நீதிமன்றம் அறிவித்திருந்தது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில், சங்கர், அருள்செந்தில், செல்வகுமார், தங்கதுரை, சுரேஷ் ஆகிய 5 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்டுள்ள தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜூக்கு ஆயுள் முழுவதும் சிறை தண்டனை வழங்கி மதுரை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், யுவராஜின் டிரைவர் அருணுக்கு ஆயுள் முழுவதும் சிறை தண்டனை மற்றும் மீதமுள்ள 8 குற்றவாளிகளுக்கு தனித்தனியாக தண்டனை வழங்கி மதுரை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Also Read: 116 சாட்சிகள்..5 பேர் விடுதலை- 11 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு: கோகுல்ராஜ் வழக்கில் இதுவரை நடந்தது என்ன?