Tamilnadu

”நகைக்கடன் தள்ளுபடிக்கு வட்டி செலுத்த வற்புறுத்தினால் நடவடிக்கை” - அமைச்சர் ஐ.பெரியசாமி கடும் எச்சரிக்கை!

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்களிடம் வட்டி செலுத்த வலியுறுத்தும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, “கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்களுக்கான இறுதி பட்டியல் ஒரு வாரத்தில் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பயனாளிகள் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் பட்டியல் வெளியிடப்பட்டவுடன் அந்தந்த கூட்டுறவு சங்கங்களின் தகவல் பலகையில் ஒட்டப்படும் என கூறினார்.

மேலும், ஜனவரி 31ம் தேதி 2021ம் ஆண்டு வரை உள்ள நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டதாக கூறிய அவர், இதற்குப் பின் தற்போது வரை அந்த நகைகளுக்கு செலுத்த வேண்டிய வட்டியை அரசே செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்களிடம் வட்டி செலுத்த வலியுறுத்தும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

இதுவரை 13 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் நகைக்கடன் தள்ளுபடி செய்ய தகுதியானவர்களாக கணக்கெடுக்கப்பட்டு உள்ளதாகவும், தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்க கூடிய பட்சத்தில் ஆய்வு செய்து அவர்களுக்கான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அமைச்சர் உறுதிபட கூறினார்.

Also Read: ”மார்ச் 3,4ல் அதிகனமழை பெய்யக்கூடும்; மீனவர்களுக்கு சூறாவளி எச்சரிக்கை” - சென்னை வானிலை மையம் தகவல்!