Tamilnadu

“மானிட்டர் தான் இல்ல.. cctv கேமரா இருக்கு” : நகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட இளம்பெண் - நடந்தது என்ன?

நகைக்கடை ஒன்றில் 47 சவரன் நகையை திருடிய இளம்பெண்ணை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலிஸார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம், வள்ளியூர் பழைய பேருந்து நிலையம் அருகில் பிரபல நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனை ராமசந்திரன் என்பவர் நடத்தி வருகிறார்.

இந்த நகைக்கடையில் பணகுடி இராஜலிங்கபுரத்தைச் சேர்ந்த சுபா (22) என்ற இளம்பெண் விற்பனை பிரதிநிதியாக கடந்த ஒரு வருடமாக வேலை செய்து வந்தார்.

நகைக்கடையின் உரிமையாளர் ராமச்சந்திரனுக்கு கடந்த ஒரு மாதமாக உடல்நிலை சரியில்லாததால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் நகைக்கடைக்கு சரிவர வரமுடியவில்லை.

இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி கடைக்குச் சென்று நகைகளை ஆய்வு செய்தபோது, 47 பவுன் நகைகள் மாயமானது தெரியவந்தது. உடனே கடையில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை பார்த்தபோது, அதில் விற்பனை பிரதிநிதியான சுபா நகைகளை திருடி தனது தாயார் விஜயலெட்சுமியிடம் கொடுத்தது தெரியவந்தது.

இதுகுறித்து ராமசந்திரன் வள்ளியூர் காவல் உதவி கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். ஏ.எஸ்.பி. உத்தரவின் பேரில் வள்ளியூர் காவல் ஆய்வாளர் சாகுல் ஹமீது வழக்குப்பதிவு செய்து விசாரணை தீவிர விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில் கடந்த 4 நாட்களாக நகைக்கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி மானிட்டர் பழுதாகி இருந்ததால் பழுது நீக்குவதற்காக மானிட்டரை சர்வீஸ் சென்டருக்கு அனுப்பியுள்ளனர்.

மானிட்டர் இல்லாததால் சிசிடிவி-யில் பதிவாகாது என்று நினைத்துக்கொண்டு இளம்பெண் சுபா திருடியது தெரியவந்தது. இதனையடுத்து வள்ளியூர் போலிஸார் சுபாவையும், அவரது தாயார் விஜயலெட்சுமியையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Also Read: மூத்த பத்திரிகையாளரை வழிமறித்து சரமாரியாக தாக்கிய மர்ம நபர்கள்.. பதறவைக்கும் CCTV காட்சி!