Tamilnadu

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ”உங்களில் ஒருவன்” தன்வரலாற்று நூலை வெளியிடுகிறார் ராகுல் காந்தி!

தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது வாழ்க்கைப் பயணத்தின் சுவடுகளை விளக்கும் வகையில், "உங்களில் ஒருவன்" என்ற பெயரில் தன்வரலாற்று நூலை எழுதியுள்ளார்.

1976ஆம் ஆண்டு வரை உள்ள 23 ஆண்டு கால நினைவுகள் இந்தப் புத்தகத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்றுள்ளன. "உங்களில் ஒருவன்" வரலாற்று நூலின் முதல் பாகம் வெளியீட்டு விழா, சென்னை - நந்தம்பாக்கத்தில் உள்ள ‘சென்னை வர்த்தக மைய கூட்டரங்கில்’ நாளை (பிப்ரவரி 28) மாலை நடைபெற உள்ளது.

பதிப்பகத் துறையில் புகழ்பெற்றதும், பழமை வாய்ந்ததுமான ‘பூம்புகார் பதிப்பகம்‘ இந்த நுலை வெளியிடுகிறது. தி.மு.க பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமையில், பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில், மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி. வரவேற்புரையாற்றுகிறார்.

இவ்விழாவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கலந்து கொண்டு, நூலினை வெளியிட்டுச் சிறப்புரையாற்றுகிறார்.

மேலும் இவ்விழாவில் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், கவிப்பேரரசு வைரமுத்து, நடிகர் சத்யராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர். விழாவின் நிறைவாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்புரையாற்ற உள்ளார்.

Also Read: “எக்காரணம் கொண்டும் மாணவர்களுக்கான கல்விக் கதவுகள் மூடப்படக் கூடாது” : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!