Tamilnadu

"கோட்சே இவங்களையும் போட்டுத்தள்ளி இருக்கணும்” : வன்முறைப் பேச்சு குறித்து போலிஸில் புகார்!

அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரை கோட்சே போட்டுத்தள்ளி இருக்கவேண்டும் என்று யூட்யூபில் பேசியவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலையத்தில் வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

யூடியூப் சேனல் ஒன்று சமீபத்தில் நடந்து முடிந்த சென்னை மாநகராட்சி தேர்தலில் 134 வது வார்டில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு உமா ஆனந்தன் என்பவர் வெற்றி பெற்றது குறித்த அந்தப் பகுதியில் வசிப்பவர்களிடம் கருத்து கேட்டது.

அப்போது ஒருவர், தான் ஒரு இந்து தீவிரவாதி என்பதில் பெருமை கொள்வதாகவும், அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், முகமது அலி ஜின்னா ஆகியோரை போட்டுத் தள்ளிவிட்டு தான் மகாத்மா காந்தியை கோட்சே கொன்றிருக்க வேண்டும், அப்படி செய்திருந்தால் தான் அவர் உண்மையான இந்து என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த சர்ச்சையான கருத்து கூறியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பெரும்புதூர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் சந்தோஷ் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து வழக்கறிஞர் சந்தோஷ் கூறும்போது, “சமீப காலமாக சமூக ஆர்வலர்கள் பலரை ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க கும்பல் தாக்கியும் கொலை செய்தும் வரும் நிலையில் இதுபோன்ற சர்ச்சையான கருத்து தெரிவித்தவர் மீது தகுந்த நடவடிக்கையை எடுக்கவேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: “My role model கோட்சே”: பள்ளி மாணவர்கள் நெஞ்சில் நஞ்சை விதைக்கும் வகையில் பேச்சுப்போட்டி-குஜராத் கொடூரம்!