Tamilnadu

”உங்கள் மீது எந்த புகாரும் வரக்கூடாது; தொடர்ந்து கண்காணிப்பேன்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கறார்!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் முழுவதும் நிறைவு பெறாமல் இருந்தாலும் இதுவரையில் எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் கூட்டணி கட்சியும் வெற்றி வாகை சூடியிருக்கிறது.

இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. தொண்டர்கள் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் திளைத்துப் போயிருக்கிறார்கள். இப்படி இருக்கையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகளை கூறியதோடு அவர்களுக்கு முக்கிய அறிவுரையையும் வழங்கியிருக்கிறார்.

அதில், “மக்கள் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும். மக்களுக்காக உண்மையாக இருந்து உழைக்க வேண்டும். மக்கள் அடிப்படை பிரச்னைகளை உடனடியாக சரிசெய்யவேண்டும்.

உங்கள் மீது எந்த புகாரும் வராத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். இதனை நான் தொடர்ந்து நிச்சயமாக உறுதியாக கண்காணித்துக் கொண்டே இருப்பேன். யாராக இருந்தாலும் தக்க நடவடிக்கை எடுப்பேன். தயங்க மாட்டேன்.” எனக் கூறியிருக்கிறார்.

முன்னதாக, கடந்த 9 மாத கால ஆட்சிக்கு மக்கள் வழங்கியிருக்கக்கூடிய நற்சான்றுதான் இந்த வெற்றி. என்னை பொறுத்தவரையில் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கக் கூடிய திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் கொடுத்திருக்கும் அங்கீகாரம்தான் இது என முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

Also Read: ”திராவிட மாடல் ஆட்சிக்கான அங்கீகாரம்தான் மக்கள் கொடுத்த இந்த வெற்றி” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூரிப்பு