Tamilnadu

சீப்பா போட்ட பிளானை சீப்பை வைத்து முடித்த எல்.முருகன் : அண்ணாமலையின் ராஜதந்திரம் வீணாகிப்போனதா?

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் என 648 நகர்ப்புறஉள்ளாட்சிகளுக்கு தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. இதற்காக மாநிலம் முழுவதும் 30 ஆயிரத்து 735 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டன.

வாக்குப்பதிவு வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நிறைவு பெற்றது. 5 மணிக்கு முன் வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் தரப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

சென்னை அண்ணா நகர் கிழக்கு - நியூ ஆவடி சாலை குஜ்ஜி தெருவிலுள்ள சென்னை மிடில் ஸ்கூலில் பா.ஜ.கவைச் சேர்ந்த ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் வாக்களித்தார்.

முன்னதாக அந்த வாக்குச்சாவடிக்கு பி.முருகன் என்பவர் வாக்குப்பதிவு செய்ய வருகையில், பூத் ஏஜெண்டுகள் தவறுதலாக இணை அமைச்சர் எல்.முருகன் பெயரில் அவரது வாக்கை டிக் செய்துகொண்டுள்ளனர்.

ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகனின் வாக்கு கள்ள ஓட்டாக போடப்பட்டுவிட்டது என்றும், தேர்தல் ஆணையர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் கொந்தளித்தார்.

இந்த விவகாரம் குறித்து, வாக்குச்சாவடி அலுவலர்களிடமும், வாக்களித்த பி.முருகன் என்பவரிடமும் டி.பி.சத்திரம் விசாரணை மேற்கொண்டனர். இதில், வாக்குப்பதிவு மைய ஏஜெண்ட் தவறுதலாக எல்.முருகனை டிக் செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து தேர்தல் அலுவலர்கள் விளக்கமளித்தனர். பின்னர் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் எந்த இடையூறும் இல்லாமல் அந்த வாக்குச்சாவடிக்கு சென்று வாக்குப்பதிவு செய்தார்.

Also Read: பூத் ஏஜெண்ட் தவறு செய்தது தெரியாமல் பொய் குற்றச்சாட்டு சுமத்திய அண்ணாமலை - எல்.முருகன் விளக்கம்!