Tamilnadu

தந்தை பெயரை மாற்றிச்சொல்லி பித்தலாட்டம் செய்த ABVP அமைப்பினர்: தனி வழக்கு பதிந்து சிறையில் அடைத்த போலிஸ்!

அரியலூர் மாணவி தற்கொலை வழக்கில் சி.பி.ஐ விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு கடந்த 14-ஆம் தேதி ஏபிவிபி அமைப்பினர் 37 பேர் சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையிலுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட முயன்றனர்.

பாதுகாப்பு பணியில் இருந்த போலிஸார் அவர்களை கலைந்து செல்லுமாறு கூறியபோதும், ஏபிவிபி அமைப்பினர் போலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இதனால், அவர்கள் மீது தேனாம்பேட்டை போலிஸார், சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தொற்று நோய் பரவல் சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட 35 பேரை கைது செய்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர். கைது செய்யப்பட்ட நபர்களை பிப்ரவரி 28 வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை 18வது பெருநகர மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

இதனையடுத்து அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட நபர்களுக்காக நீதிமன்றத்தில் ஏபிவிபி அமைப்பினரால் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட நபர்களில் 12 பேர் போலிஸாரின் விசாரணையில் தங்களது தந்தை பெயர், முகவரி உள்ளிட்டவற்றை தவறாகக் கொடுத்தது தெரியவந்துள்ளது. அவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் அவர்களின் கையெழுத்து போலி என்பதும் தெரியவந்தது.

அவர்கள் மீது போலி கையெழுத்து இடுதல், மோசடி ஆவணத்தை பயன்படுத்தல், பொய்யாகப் புனையப்பட்ட ஆவணங்கள் சமர்பித்தல், ஏமாற்றுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் தேனாம்பேட்டை போலிஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

Also Read: மருத்துவர் சுப்பையா பணியிடை நீக்கம்.. அதிரடி உத்தரவு பிறப்பித்த மருத்துவக் கல்வி இயக்குநரகம்!