Tamilnadu

தோல்வி பயத்தில் தேர்தலை சீர்குலைக்க முயற்சி.. SP வேலுமணி, அதிமுக MLAக்கள் கூண்டோடு கைது: போலிஸ் அதிரடி!

தமிழ்நாட்டின், நகர்புற உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் அமைதியான முறையில் நடைபெற்று வருகின்றன. நாளை வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இந்நிலையில், அ.தி.மு.க-வினர் தேர்தல் தோல்வி பயத்தில், தி.மு.க-வினர் மீது பொய் புகார் கூறி தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அ.தி.மு.க கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில், அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வந்தனர்.

அவர்களிடம் மாவட்ட ஆட்சியர் சமரச பேச்சுவார்த்தை நடத்தியும் கேட்க மறுத்து தொடர் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறை உயரதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது, உடன்படமறுத்து, அ.தி.மு.க-வினர் தொடர்ந்து காவல்துறையினரையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

காவல்துறையினரும், பலமுறை சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வந்ததால், காவல்துறையினர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 9 அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களையும் கைது செய்தனர்.

இதனால் அங்கு திரண்டிருந்த அ.தி.மு.க தொண்டர்கள் காவல்துறையினரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது அனைவரும் ராம் நகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ளனர். அ.தி.மு.க-வினரின் இத்தகைய சம்பவம் அப்பகுதி மக்களிடையே முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: வாக்காளர்களுக்கு ரூ.10 நோட்டு கொடுத்து டோக்கன் போட்ட அதிமுக.. கொத்தாக பிடித்து போலிஸில் ஒப்படைத்த திமுக !