Tamilnadu

“கொடநாடு விவகாரம் - 2024ல் எடப்பாடி பழனிச்சாமி சிறையில் இருப்பார்” : பரப்புரையில் EVKS. இளங்கோவன் பேச்சு!

சென்னை மாநகராட்சி 165வது காங்கிரஸ் வேட்பாளர் நாஞ்சில்.ஈஸ்வர பிரசாத்தை ஆதரித்து முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் திறந்த வெளி வாகனத்தில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர். உடன் தி.மு.க,காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.

அப்போது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதாவது, நாடாளுமன்றம், சட்டமன்றம் தேர்தல்களில் மிகப்பெரிய வெற்றியை தந்தீர்கள். இந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றியை தர வேண்டிய அவசியமாகிறது. தேர்தல் முடிவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கரத்தை பலப்படுத்துவதாகும். முதலமைச்சராக பதவி ஏற்ற பின் எழுச்சி மிக்கவராக கடுமையாக உழைக்கிறார்.

இந்தியாவில் இதுபோன்ற முதல்வர் கிடையாது. உலகத்தில் உழைக்கின்ற தலைவராக மு.க.ஸ்டாலின் உள்ளார். அமெரிக்கா அதிபர், இங்கிலாந்து பிரதமர் உட்பட உலக தலைவர்கள் 2 மாதத்திற்கு ஒரு முறை ஒய்வு எடுப்பார்கள். ஆனால் ஒரு நாள் கூட ஒய்வு எடுக்காமல் உழைப்பவர் மு.க.ஸ்டாலின். 8 மாத ஆட்சியில் நல்ல பல காரியங்களை செய்து உள்ளார். கட்சி வேறுபாடு இன்றி தமிழர்களுக்கு உழைக்கிறார்.

அ.தி.மு.க ஒரு கட்சியாகவே இல்லை. பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். ஏன் ஜெயலிதாவை கூட மறந்து விட்டார்கள். தலைவர்களை மறந்து விட்ட அ.தி.மு.கவிற்கு பாடம் புகட்ட வேண்டும். சட்டமன்றத்தில் கொடநாடு என்றதும் திருடனை போல் ஓடிச் சென்று எடப்பாடி பழனிச்சாமி சாலையில் உட்கார்ந்து விட்டார். நிச்சயமாக 2024ல் எடப்பாடி பழனிச்சாமி சிறையில் இருப்பார். கொடநாடு கொள்ளைக்கும் கொலைக்கும் அவர் தான் காரணம்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: தி.மு.கவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த வெளிநாட்டு பயணி : வியந்துப்போன கோவை மக்கள்!