Tamilnadu

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அ.தி.மு.க நிர்வாகி குண்டர் சட்டத்தில் கைது- பெரம்பலூர் ஆட்சியர் அதிரடி!

பெரம்பலூர் - பூலாம்பாடி அ தி.மு.க.நகரச்செயலாளர் வினோத் என்பவர் பெண் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கைது செய்யப்பட்ட நிலையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டார்.

பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடி அ.தி.மு.க நகர செயலாளராக இருப்பவர் வினோத் (48). இவர் மீது ஏற்கனவே அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றி மோசடி செய்ததாக பெரம்பலூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இவர் மீது பூலாம்பாடியை சேர்ந்த சுதாலட்சுமி (40) என்பவர் அரும்பாவூர் காவல்நிலையத்தில் அளித்துள்ள புகாரில், பூலாம்பாடி அ.தி.மு.க நகரசெயலாளர் வினோத் தனக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாகவும், கத்தியை காட்டி மிரட்டி ஆசைக்கு இணங்கச் சொன்னதாகவும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தன்னுடைய ஆசைக்கு இணங்காவிட்டால் நீ நடத்தும் கேஸ் கம்பெனியோடு உன்னையும் கொளுத்திவிடுவேன் எனவும் அ.தி.மு.க நகர செயலாளர் வினோத் அடிக்கடி தன்னை மிரட்டி வந்ததாகவும் தொந்தரவுக்கு உள்ளான பெண் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் அரும்பாவூர் போலிஸார் பூலாம்பாடி அ.தி.மு.க நகர செயலாளர் வினோத் மீது கொலை முயற்சி, அத்துமீறி வழி மறித்து மிரட்டுதல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் வினோத் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால், பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ச.மணி பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா, வினோத்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.

பாலியல் புகாரில் பூலாம்பாடி அ.தி.மு.க நகர செயலாளர் வினோத் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதில் புகார் தெரிவித்துள்ள சுதாலட்சுமி என்பவரின் கணவர் சுய நினைவில்லாத மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: பண மோசடி புகார்... OPS, EPS-க்கு நெருக்கமான அ.தி.மு.க நிர்வாகி தலைமறைவு!