Tamilnadu

“எனக்கு வாழவே பிடிக்கவில்லை.. காதலி இறந்த துக்கம் தாங்காமல் காதலன் தற்கொலை” : மதுரையில் நடந்த சோகம்!

மதுரை மாவட்டம், டீ கல்லுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரபு காந்த். இளைஞரான இவர் தீபா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர் கடந்த மாதம் இறந்துவிட்டார். இதனால், பிரபு காந்த் கடந்த சில நாட்களாக யாருடனும் பேசாமல் தனியாக இருந்துவந்துள்ளார்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரபு காந்த் சென்னை வந்துள்ளார். இவர்கள் விடுதி ஒன்றில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர். பின்னர் நேற்று முன்தினம் தனது நண்பர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் வீடியோ அனுப்பியுள்ளார்.

அதில், “தனக்கு இதுவரை உதவியாக இருந்த அனைவருக்கும் நன்றி. அப்பா மற்றும் அத்தை என்னை மன்னித்து விடுங்கள். நான் யாரையாவது கஷ்டப்படுத்தி இருந்தால் மன்னித்துவிடுங்கள்” என பேசியுள்ளார்.

அந்த வீடியோவை பார்த்த அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்து உடனே அவரை தொடர்பு கொண்டனர். அப்போது அவர் “தீபா இல்லாமல் என்னால் இனி வாழ முடியாது” என கூறி இணைப்பைத் துண்டித்துள்ளார். இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

பின்னர் போலிஸார் அவர் தங்கி இருந்த அறைக்கு சென்று பார்த்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது உடலை மீட்டு போலிஸார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கூந்தலுக்குள் வைத்து தங்கம் கடத்திய பெண்கள்: சென்னை கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் வசமாக சிக்கியது எப்படி?