Tamilnadu

வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞர்.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

காதலி இறந்த சோகத்தில் வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரபு கார்த்தி என்ற இளைஞர் நேற்று பெரியமேடு அருகே உள்ள தனியார் விடுதியில் தங்கி உள்ளார்.

அப்போது, அவர் தூக்கு கயிறுடன் செல்பி எடுத்து, அனைவருக்கும் நன்றி எனவும் பெற்றோர் மன்னித்து விடுங்கள் எனவும் தெரிவித்து வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.

இதனைப் பார்த்த பிரபு கார்த்தியின் நண்பர்கள், அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட நிலையில் அவரது செல்போன் ஸ்விட்ச்-ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

பின்னர் அவர் தங்கி இருந்த விடுதிக்கு சென்று பார்த்தபோது அறை பூட்டி இருந்ததால் பெரியமேடு போலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து விரைந்து வந்த போலிஸார் கதவை உடைத்து பார்த்தபோது பிரபு கார்த்தி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார்.

சடலத்தை மீட்ட போலிஸார் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் தீபா என்ற பெண்ணை பிரபு காதலித்து வந்ததும், சென்ற மாதம் தீபா இறந்ததில் இருந்து பிரபு மன உளைச்சலில் இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து வழக்குபதிவு செய்த போலிஸார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: காதலை முறித்து கொண்ட காதலி.. WHATSAPP-ல் வீடியோ வெளியிட்டு காதலன் தற்கொலை : விசாரணையில் ‘பகீர்’ தகவல்!