Tamilnadu

ஆன்லைன் தேர்வா? - நேரடித் தேர்வா?.. கல்லூரி மாணவர்கள் குழப்பத்திற்கு அமைச்சர் பொன்முடி விளக்கம்!

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்தைத் அடுத்து கல்லூரிகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்லூரி தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும் என ஏற்கனவே உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பிப்ரவரி 1ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படுவதாக நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனால் கல்லூரி தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறுமா அல்லது நேரடியாக நடைபெறுமா என மாணவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது.

இதையடுத்து இன்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஏற்கனவே அறிவித்தபடி கல்லூரி தேர்வுகள் ஆன்லைனிலேயே நடைபெறும் என தெரிவித்தார்.

இது குறித்து மேலும் அமைச்சர் பொன்முடி கூறுகையில், "பிப்ரவரி 1ம் தேதியிலிருந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

அதேபோல் ஏற்கனவே அறிவித்தபடி 1, 3, 5வ்து பருவத் தேர்வுகள் ஆன்லைனிலேயே நடைபெறும். எனவே ஆன்லைன் தேர்வு நடைபெறும்போது மாணவர்கள் கல்லூரிக்கு வரவேண்டாம். வீட்டில் இருந்தே ஆன்லைன் தேர்வு எழுதலாம்.

தேர்வு இல்லாத மற்ற நாட்களில் கல்லூரிக்கு வரவேண்டும். கல்லூரிகளில் நடத்தப்படும் செய்முறைத் தேர்வுகளில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: "ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து.. நாளை முதல் இரவு நேர ஊரடங்கு கிடையாது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!