Tamilnadu

விலாசம் கேட்பது போல் பாலியல் சீண்டல்; 120 CCTV காட்சிகள் ஆய்வு; வேளச்சேரி போலிஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை!

சிசிடிவி கேமிராக்களின் உதவியால் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவரை அதிரடியாக கைது செய்திருக்கிறார்கள் சென்னை வேளச்சேரி போலிஸார்.

நங்கநல்லூரைச் சேர்ந்த 20 வயதான இளம்பெண் ஒருவர் கடந்த 10ம் தேதியன்று வேளச்சேரி எம்.ஆர்.டி.எஸ். சாலையில் நடைபயிற்சி முடித்துவிட்டு தனது டூவீலரில் வீடு திரும்பியிருக்கிறார்.

மடிப்பாக்கம் வழியே சென்றுக் கொண்டிருந்த போது அவ்வழியே வந்த இளைஞர் ஒருவர் அப்பெண்ணிடம் முகவரி கேட்பது போல பேச்சு கொடுத்து அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார்.

இதனால் அந்த இடத்திலேயே அப்பெண் மயங்கியிருக்கிறார். இதனையடுத்து உடனடியாக அந்த நபர் தப்பியோடியிருக்கிறார். மயங்கிய அப்பெண்ணை அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள்.

சிகிச்சைக்கு பின் தனக்கு நடந்த நிகழ்வு குறித்து பாதிக்கப்பட்ட பெண் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். அதன் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த போலிஸார் சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சுமார் 120 சிசிடிவி கேமிராக்காளை ஆராய்ந்திருக்கிறார்கள்.

அதன் மூலம் இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது பள்ளிக்கரணை ராம் நகரைச் சேர்ந்த கட்டட வேலை செய்யும் சந்தோஷ் என தெரிய வந்திருக்கிறது.

இதனையடுத்து சந்தோஷை கைது செய்து விசாரித்ததில் 20 வயதான அந்த இளைஞர் ஆள்நடமாட்டமில்லாத இடத்தில் செல்லும் பெண்களை குறிவைத்து பாலியல் சீண்டலில் ஈடுபடுவதையே வழக்கமாக கொண்டிருக்கிறார் என தெரிய வந்திருக்கிறது.

Also Read: கணவருடன் சண்டையிட்டு வெளியேறிய பெண்ணுக்கு ரயில் நிலையத்தில் காத்திருந்த அதிர்ச்சி; திருச்சியில் பரபரப்பு!