Tamilnadu

ஆட்டோவை திருட முயன்ற கும்பல்.. தர்மஅடி கொடுத்து போலிஸிடம் ஒப்படைத்த கிராம மக்கள்!

செங்கல்பட்டு மாவட்டம், திருவடிசூலம் சன்னதி தெரு பகுதியைச் சேர்ந்தவர் தனசேகரன். இவருடைய மகன் ஏகாம்பரம். இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வேலையை முடித்துவிட்டு வீட்டின் வாசலில் ஆட்டோவை நிறுத்தியுள்ளார்.

பின்னர், நள்ளிரவில் மர்ம நபர்கள் ஏகாம்பரத்தின் ஆட்டோ லாக்கரை உடைத்து சாலையில் தள்ளிச் சென்று கொண்டிருந்தனர். இதைப்பார்த்த, அப்பகுதிவாசி ஒருவர் ‘ஆட்டோவை இரவில் எங்கு தள்ளிச் செல்கிறீர்கள்' என கேட்டுள்ளார். இதற்கு அவர்கள் முன்னுக்கு பின் முரணாகப் பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அவர் சத்தம் போட்டுள்ளார்.

சத்தம் கேட்டு வெளியே வந்த அப்பகுதி மக்கள் ஆட்டோவை தள்ளிச் சென்ற மர்ம நபர்களைப் பிடிக்க முயன்றனர். அப்போது அந்த கும்பல் கத்தியைக் காட்டி பொதுமக்களை மிரட்டினர். இதையடுத்து, பொதுமக்கள் அவர்களை மடக்கிப் பிடித்து, தப்பிவிடாமல் இருக்க கை, கால்களைக் கட்டி அவர்களுக்கு தர்மஅடி கொடுத்தனர்.

பின்னர் இதுகுறித்து போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த போலிஸாரிடம் பொதுமக்கள் அந்த கும்பலை ஒப்படைத்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் பிரகாஷ், சஞ்சய், கஜேந்திரன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் மூன்று பேரையும் கைது செய்தனர்.

Also Read: பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை.. மாணவிக்கு நடந்த கொடூரம் - பின்னணி என்ன?