Tamilnadu

“₹.30 லட்சம் கேட்டு தந்தையிடமே கடத்தல் நாடகமாடிய மகன்” : விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

சென்னை, திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர் பென்சிலய்யா. இவர் தனது மகன் கிருஷ்ண பிரசாத் கடந்த 13ம் தேதியிலிருந்து காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகார் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். இந்நிலையில் பென்சிலய்யாவின் செல்போனுக்கு மகன் கிருஷ்ணபிரசாத்தின் செல்போனில் இருந்து அழைப்பு ஒன்று வந்துள்ளது

இதில், 'உங்களது மகனை கடத்திவைத்துள்ளோம். ரூ. 30 லட்சம் கொடுத்தால் விட்டுவிடுகிறோம். கேட்ட பணத்தைக் கொடுக்கவில்லை என்றால் உங்கள் மகனைக் கொன்று விடுவோம்' என பேசி இணைப்பைத் துண்டித்துள்ளனர்.

இது குறித்து போலிஸாருக்கு பென்சிலய்யா தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த செல்போன் எண்ணைவைத்து தீவிரமாக விசாரணை நடத்தியபோது கிருஷ்ணபிரசாத் தெலங்கானாவில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அங்கு சென்று போலிஸார் கிருஷ்ணபிரசாத்தை மீட்டு விசாரணை செய்தபோது திடுக்கிடுத் தகவல் வெளிவந்தது. அதில், குறும்படம் எடுக்க கிருஷ்ணபிரசாத்திற்கு பணம் தேவைப்பட்டுள்ளது. இதனால் தன்னை கடத்திவிட்டதுபோல், கிருஷ்ணபபிரசாத் நாடகமாடி தந்தையிடமே பணம் பறிக்க முயற்சி செய்தது தெரியவந்தது.

பின்னர் போலிஸார் அவரது பெற்றோரை காவல்நிலையம் வரவழைத்து கிருஷ்ண பிரசாத்தை எச்சரிக்கை செய்து பெற்றோருடன் அனுப்பிவைத்தனர்.

Also Read: ஆட்டுக்குப் பதில் மனிதரின் தலையை வெட்டியதால் பரபரப்பு.. கோயில் திருவிழாவில் நடந்த பகீர் சம்பவம்!