Tamilnadu

கூலிப்படையை ஏவி பெற்ற மகனையே கொலை செய்த தாய்.. திருச்சி அருகே நடந்த பயங்கரம்!

திருச்சி மாவட்டம், ஈச்சம்பட்டி பகுதியில் உள்ள ஏரியில் வாலிபர் ஒருவரின் சடலத்தை போலிஸார் மீட்டனர். இவர் குறித்து போலிஸார் விசாரணை நடத்தியதில் மண்ணச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பது தெரியவந்தது.

இதையடுத்து சதீஷ்குமாரின் மர்ம மரணம் குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. மண்ணச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மனைவி அம்சவள்ளி.

இந்த தம்பதிக்கு அமிர்தராஜ் மற்றும் சதீஷ்குமார் என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் உயிரிழந்த சதீஷ்குமாருக்கு லோகேஸ்வரி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில் பெற்றோரிடம் சதீஷ்குமார் சொத்தில் பங்கு கேட்டுள்ளார். இதனால் கன்னியாக்குடியில் உள்ள ரூ.1.25 கோடி நிலத்தை விற்று அண்ணன், தம்பி இருவருக்கும் தலா ரூ.40 லட்சம் பணத்தைக் கொடுத்துள்ளார்.

ஆனால் குடி பழக்கத்திற்கு அடிமையான சதீஷ்குமார் கொடுத்த பணம் அனைத்தையும் குடித்தே செலவழித்துள்ளார். பின்னர் மீண்டும் தனது தாய் அம்சவள்ளியிடம் மீண்டும் பணம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதையடுத்து பெற்ற மகனையே கொலை செய்ய அம்சவள்ளி திட்டம் போட்டுள்ளார். இதற்காக புல்லட் ராஜா என்பவரிடம் ரூ. 5 லட்சம் பேரம் பேசி முன்பணமாக ரூ. 20 ஆயிரம் கொடுத்துள்ளார். இதையடுத்து புல்லட் ராஜாவும் அவனது கூட்டாளிகளும் கடந்த 7ம் தேதி ஈச்சம்பட்டி பகுதியில் உள்ள ஏரியில் சதீஷ்குமாருடன் சேர்ந்து மது குடித்துள்ளனர்.

அப்போது, அந்த கும்பல் சதீஷ்குமாரின் கை, கால்களைக் கட்டியும், உடலில் கல்லைக் கட்டி ஏரியில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலிஸார் கூலிப்படை தலைவன் புல்லட் ராஜா, கொத்தனார் ராஜா, சுரேஷ், ஷேக் அப்துல்லா, அரவிந்த்சாமி மற்றும் தாய் அம்சவள்ளி உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்தனர்.

Also Read: “கடனை திருப்பி செலுத்தியும் ஆபாச படம் அனுப்பி மிரட்டுறாங்க” : ஆன்லைன் செயலி மோசடி - புகாரால் அதிர்ச்சி!