Tamilnadu

தந்தையின் கண்முன்னே நேர்ந்த சோகம்.. சாலை விபத்தில் 2 சிறுவர்கள் பரிதாப பலி - கதறி அழுத தந்தை!

சென்னையை அடுத்த ஆவடியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி சுமலதா. இந்த தம்பதிக்கு ஆதிரன், கவுசிக் என இரண்டு சிறுவர்களும் மற்றும் ஒரு கைக்குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில் செல்வத்தின் உறவினர்கள் சபரிமலைக்குச் செல்வதால் அவர்களை வழிஅனுப்பதற்காக மகாலிங்கபுரத்தில் உள்ள கோவிலுக்கு குடும்பத்தாருடன் சென்றுள்ளனர். பின்னர் செல்வத்தின் இருசக்கர வாகனத்தில் ஆதிரன் மற்றும் கவுசிக் ஆகியோர் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

பின்னர், மதுரவாயல் அருகே வந்தபோது முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதியதில் மூன்று பேரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று சிறுவர்கள் ஆதிரன், கவுசிக் மீது ஏறியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் படுகாயமடைந்த செல்வம் தன் கண்முன்னே மகன்கள் இறந்ததைப் பார்த்துக் கதறி அழுதார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் இறந்த சிறுவர்களின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் படுகாயமடைந்த செல்வத்தை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சாலை விபத்தில் தந்தையின் கண்முன்னே இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: குரங்குக்கு இறுதிச்சடங்கு நடத்தி சிக்கிய ம.பி., கிராமத்தினர்: வழக்குப்பதிவு செய்த போலிஸ்; நடந்தது என்ன?