Tamilnadu

"பொங்கல் முடிந்ததும் ழுமு ஊரடங்கா?" : அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது என்ன?

சென்னை திருவான்மியூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் இருப்பவர்களுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கருவியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேரில் சென்று வழங்கினார்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,"தமிழ்நாட்டில் கொரோனா தினசரி 2000 மாக அதிகமாக வருகிறது. ஆனால் பாதிக்கப்படுபவர்கள் மிதமான தொற்று இருப்பதால் அவர்களை ஐ.சி.எம்.ஆர். ஆலோசனை படிவீட்டிலேயே தனிமைப்படுத்தி வருகிறோம்.

வீட்டில் தனிமையில் இருப்பவர்கள் காலை மாலை பல்ஸ் ஆக்ஸ்மீட்டரில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 92 என்ற புள்ளிக்குக் கீழ் வந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

சென்னையில் 26 ஆயிரம் பேர் இப்போது கொரோனா சிகிச்சையில் உள்ளனர். இதில் 21987 பேர் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இணை நோய் உள்ளவர்கள் பாதிப்பு அதிகம் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு வரலாம். லேசான அறிகுறிகள் இருப்பவர்கள் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொள்ளலாம். சென்னையில் வீட்டுத் தனிமையில் இருப்பவர்களைக் கண்காணிக்க 178 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒமைக்ரான் பரிசோதனை இப்போது செய்யப்படவில்லை. பாதிப்பில் 85 % பேருக்கு ஒமைக்ரான் அறிகுறிகள் இருக்கிறது. இப்போது வரும் பாதிப்பு எல்லாமே எஸ் ஜீன் பாதிப்பு தான். இதனால் தனியாக ஒமிக்ரான் பரிசோதனை செய்யப்படுவதில்லை.

மக்களின் வாழ்வாதாரம், பாதிக்கப்படக் கூடாது என்பதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கிறார் .மக்கள் ஒத்துழைப்பால் கொடுத்தால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டிய அவசியம் வராது.

பொங்கலுக்குப் பிறகு தொடர்ச்சியாக முழு ஊரடங்கு இருக்க வாய்ப்பு இல்லை. பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாள் 15-ம் தேதி சனிக்கிழமை என்பதால் இந்த வாரம் மெகா தடுப்பூசியை நடத்தாமல் அடுத்த வாரம் சனிக்கிழமை நடத்தலாமா என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் விரைவில் முடிவு அறிவிக்கப்படும்.

நாளை பிரதமர், முதல்வர் தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரியைத் திறந்து வைக்க உள்ளனர். டெல்லியிலிருந்து பிரதமர் காணொலி மூலம் திறந்து வைப்பார். நாளை மாலை 4-5 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தலைமைச் செயலகம் வர இருக்கிறார். 11 கல்லூரிகளில் 1450 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்" என தெரிவித்துள்ளார்.

Also Read: 75% வாக்குறுதிகளை நிறைவேற்றி தி.மு.க அரசு சாதனை : தினத்தந்தி நாளேடு புகழாரம்!