Tamilnadu

9 வயது சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு: குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை - தேனி மகிளா கோர்ட் அதிரடி தீர்ப்பு!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மனியக்காரன்பட்டியைச் சேர்ந்தவர் தங்கசாமி (எ) நியூட்டன் (49).

இவர் 9 வயது சிறுமியை பாலியல் ரீதியாக வன்புணர்வு செய்ததாகவும், இது பற்றி வெளியே தெரிவித்தால் கொன்றுவிடுவேன் என கத்தியைக் காட்டி மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

தங்கசாமி (எ) நியூட்டன்

அதனடிப்படையில் விசாரணை நடத்திய மகளிர் காவல்துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து தங்கசாமியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

இது தொடர்பான வழக்கு விசாரணையில் தேனி மகிளா நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூபாய் 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி வெங்கடேசன் தீர்ப்பளித்தார்.

மேலும் அபராதத்தை செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாத சிறை தண்டனை ஏக காலத்திற்கு அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். மகிளா நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதோடு பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு இது எச்சரிக்கை மணியாகவும் அடிக்கப்பட்டுள்ளது.

Also Read: மனிதனை விழுங்கியதா மலைப்பாம்பு?.. வதந்தி பரவியதால் பரபரப்பு: நடந்தது என்ன?