Tamilnadu

குத்துச்சண்டை போட்டிக்கு சென்ற கல்லூரி மாணவி.. கடலில் மூழ்கி பலியான சோகம்!

குத்துச்சண்டை போட்டிக்காக புதுச்சேரி சென்ற கோவை மாணவி, புதுச்சேரி கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார்.

கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லுாரியில் பயிலும் 17 மாணவிகள், 3 பயிற்சியாளர்கள் என 21 பேர், தனியார் சங்கம் ஏற்பாடு செய்த குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்பதற்காக புதுச்சேரி சென்றனர்.

பல்வேறு சுற்றுலா தளங்களை சுற்றிப்பார்த்த பிறகு, மாலை கடற்கரைக்குச் சென்றனர். தலைமை செயலகம் எதிரே கடலில் இறங்கி மாணவிகள் விளையாடினர். அப்போது, பயிற்சியாளர் சர்வேஸ்வரன் (27), அமிர்தா (19); பூமதி (19) ஆகியோர் கடலலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.

ராட்சத அலையில் சிக்கிய மூவரும் தங்களை காப்பாற்றும்படி கைகளை காட்டி சைகை செய்தனர். கரையில் இருந்த சக மாணவிகள், பயற்சியாளர்கள், பொதுமக்கள் மாணவிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பெரியக்கடை போலிஸார், கடலோரக் காவல் படையினர், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் இறங்கினர்.

பயிற்சியாளர் சர்வேஸ்வரன், மாணவி அமிர்தா ஆகிய இருவரை மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்து, அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சிறிதுநேர தேடலுக்குப் பிறகு பின்னர் பூமதியை மீட்டனர். ஆனால், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பூமதி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பெரியக்கடை போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்த இடத்தில் கல்லூரி மாணவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: செல்போன் தராததால் ஆத்திரம்.. முதியவரை வெட்டிக் கொலை செய்த இளைஞர் - தூத்துக்குடி அருகே ‘பகீர்’ சம்பவம்!