Tamilnadu

திருச்சியில் லாரியை மடக்கி வழிப்பறி; போலிஸில் சிக்கிய பசு பாதுகாவலர்கள் - வசூல் வேட்டை நடத்தியது அம்பலம்!

கேரளாவைச் சேர்ந்த லாரி ஒன்று ஆந்திராவில் இருந்து மாடுகளை ஏற்றிக் கொண்டு கோவை, பொள்ளாச்சிக்கு சென்றுக் கொண்டிருந்தது.

திருச்சியின் துறையூர் வழியாக கடந்தபோது அவ்வழியே காரில் வந்த இருவர் லாரியை மடக்கியிருக்கிறார்கள். அப்போது, தங்களை இந்து அமைப்பைச் சேர்ந்த பசு பாதுகாவலர்கள் எனக் கூறிக் கொண்டு லாரி ஓட்டுநரிடம் பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார்கள்.

இந்து அமைப்பினரின் மிரட்டலுக்கு அஞ்சாமல் பணம் கொடுக்க மறுத்த லாரி பணியாளர்களை அவர்கள் பிரம்பால் தாக்கியிருக்கிறார்கள். இதுதொடர்பாக துறையூர் காவல்நிலையத்துக்கு லாரி லோடுமேன் தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவம் நடந்த கிழக்குவாடிக்கு வந்த போலிஸார் வழிப்பறியில் ஈடுபட்டவர்களை கைது செய்து விசாரணையை மேற்கொண்டனர்.

அதில், திருச்சி வத்தாலை பகுதியைச் சேர்ந்த சிரஞ்ஜீவி (29), கண்ணன் (33) இருவரும் இந்து அமைப்பின் பேரில் இவ்வாறு தொடர்ந்து வசூல் வேட்டையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவர்களிடம் தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும் போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.