Tamilnadu

வேறு ஒருவர் பெயரில் நகைக்கடன்... மோசடி செய்த அ.தி.மு.க நிர்வாகி மீது புகார்!

விழுப்புரம் மாவட்டம் மேல் வாலை ஊராட்சியைச் சேர்ந்தவர் கலியபெருமாள். இவர் கண்டத்திலுள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் 10 கிராம் நகைக்கடன் பெற்றிருந்தார். நேற்று தமிழக அரசு அறிவித்துள்ள நகைக் கடன் தள்ளுபடியில் தனக்கு தள்ளுபடி கிடைத்துள்ளதா என மத்திய கூட்டுறவு வங்கியில் சென்று பார்த்தார்.

அப்போது கலியபெருமாளுக்கு நகைக் கடன் தள்ளுபடி இல்லை என வங்கி செயலாளர் தெரிவித்தார். இதுகுறித்து வங்கி செயலாளரிடம் கேட்டபோது கலியபெருமாள் காஞ்சிபுரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 5 சவரன் நகைக் கடன் பெற்றுள்ளதால் நகைக் கடன் தள்ளுபடி கிடைக்கவில்லை என மத்திய கூட்டுறவு வங்கி செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கலியபெருமாள் தாம் வேறு எந்த வங்கியிலும் நகைக்கடன் பெறவில்லை என்றும் தமது பெயரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் போலியாக நகைக்கடன் பெற்றுள்ளதையும் அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

இதுபற்றி கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் தமது பெயரில் மத்திய தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வங்கி செயலாளர் மற்றும் வங்கியின் தலைவர் அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் தனபால் ராஜ் ஆகியோர் போலியாக ஆவணம் தயார் செய்து நகைக்கடன் பெற்றுள்ளதாக புகார் செய்துள்ளார்.

புகார் மனுவை பெற்ற போலிஸார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் மற்றும் தலைவர் அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் தனபால்ராஜிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் கண்டாச்சிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் போலியாக வேறு யார் பெயரிலாவது நகைக்கடன் பெறப்பட்டுள்ளதா என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: உதவிய பா.ஜ.க நிர்வாகி உள்ளிட்ட 4 பேரும் கைது.. விருதுநகர் நோக்கி விரையும் தனிப்படை போலிஸ்- அடுத்தது என்ன?