Tamilnadu

“39 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி.. வெளிநாடுகளில் இருந்து வந்தால் கட்டாய தனிமை” : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்த 39 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி உள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “ஒமைக்ரான் அபாய நாடுகளில் இருந்து மட்டுமல்லாமல், அபாயம் அல்லாத நாடுகளில் இருந்து வருபவர்களுக்கும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.

வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவரும் நாளை முதல் தங்களது வீடுகளில் 7 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். 8வது நாள் கோவிட் பரிசோதனை செய்யப்படும். அதில் தொற்று இல்லை என முடிவு வந்தால் ம்ட்டுமே வெளியே நடமாடலாம்.

தற்போது, வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்த 39 பேருக்கு ஒமைக்ரானுக்கு முந்தைய அறிகுறி காணப்படுகிறது. அவர்களின் மாதிரிகள் மத்திய அரசின் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட 34 பேரில் 12 பேர் நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும். கூட்டமாக நடத்தப்படும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்க வேண்டாம். ஒமைக்ரானில் இருந்து மீள தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும்.

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 1.5 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 2,500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. 1,400 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தயாராக உள்ளது.” எனத் தெரிவித்தார்.

Also Read: ஒமைக்ரான் எதிரொலி: 3ம் அலையோடு 2022 தொடங்குகிறதா? - ஆராய்ச்சியாளர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்கள் என்ன?