Tamilnadu

YOUTUBE பார்த்து பிரசவம் பார்ப்பதா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுவதென்ன?

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் எலும்பு வங்கியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். மேலும் துணை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.

முன்னதாக மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தவறான அணுகுமுறையாகும். ராணிப்பேட்டையில் யூடியூப் பார்த்து மனைவிக்குக் கணவன் பிரசவம் பார்த்தது தொடர்பாகச் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி வழங்கும் திட்டம் தொடங்கப்படவுள்ளது. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசிக்கு ஒன்றிய அரசு அனுமதி கொடுத்தவுடன் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடும் முதல் மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கும்.

இந்த வாரம் சனிக்கிழமையன்று கிறிஸ்துமஸ் பண்டிகை உள்ளதால், அன்று நடைபெற வேண்டிய கொரோனா தடுப்பூசி முகாம் வரும் இரண்டு வாரங்கள் ஞாயிற்றுக்கிழமையில் நடைபெறும்" என தெரிவித்தார்.

Also Read: தென்தமிழகத்தில் முதல் முறையாக மதுரையில் ‘எலும்பு வங்கி’ தொடக்கம்.. தமிழ்நாடு அரசுக்கு குவியும் பாராட்டு!