Tamilnadu

2 குழந்தைகளைக் கிணற்றில் வீசி தாய் எடுத்த விபரீத முடிவு.. திண்டுக்கல்லில் சோகம்!

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அடுத்த அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் லட்சுமி மன வருத்தத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து தனது இரு குழந்தைகளுடன் லட்சுமி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பிறகு சித்தூர் செல்லும் சாலையில் இருக்கும் கிணற்றுப் பகுதிக்குக் குழந்தைகளுடன் சென்றுள்ளார். அங்கு திடீரென இரண்டு குழந்தைகளையும் கிணற்றில் வீசி, அவரும் கிணற்றில் குதித்துள்ளார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனே காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர்.

பின்னர் தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் அங்கு வந்து கிணற்றில் இறங்கி மூன்று பேரையும் தேடினர். பிறகு மூன்று பேரின் சடலங்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து லட்சுமியின் கணவர் சரவணனிடம் தற்கொலைக்கான காரணம் குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: ஏலச்சீட்டு மோசடியில் சிக்கிய அப்பாவிகள்; ரூ.48 லட்சத்தை ஏப்பம் விட்ட தாய் மகன் சிக்கியது எப்படி?