Tamilnadu

பட வாய்ப்பு கிடைக்காததால் விரக்தி.. வழிப்பறி கொள்ளையனாக மாறிய இயக்குநர் : விசாரணையில் ‘பகீர்’ தகவல் !

சென்னை மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் கடந்த 25ம் தேதி வீட்டின் அருகே சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்து அங்கிருந்து தப்பிச் சென்றார். இது குறித்து அவர் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து கொள்ளைச் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் மர்ம நபர் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தின் எண்ணைக் கொண்டு விசாரணை நடத்தினர். இதில், விஜய்பாபு என்பவர்தான் செயின்பறிகொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதில், சினிமாவில் துணை இயக்குநராக இருக்கும் விஜய்பாபு, புதிய திரைப்படங்களுக்கு வாய்ப்பு கிடைக்காததால் விரக்தியில் இருந்துள்ளார். மேலும் கையில் பணமும் இல்லாமல் அவதிப்பட்டுவந்துள்ளார். இதையடுத்து இரவில் தனியாகச் செல்லும் பெண்களைக் குறிவைத்து அவர்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Also Read: சுயதொழில் பயிற்சி அளிப்பதாகக் கூறி ரூ.5 கோடி மோசடி.. youtuber வீட்டை முற்றுகையிட்ட மக்கள் - நடந்தது என்ன?