Tamilnadu

6 மாத குழந்தை நரபலி?.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரிடம் போலிஸ் தீவிர விசாரணை : நடந்தது என்ன?

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்தவர் நசுருதீன். இவரது மனைவி ஹாஜிரா. இந்த தம்பதிக்கு ஆறு மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று இரவு ஹாஜிரா தூக்கத்திலிருந்து எழுந்துபார்த்தபோது குழந்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்து கணவனிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர், குழந்தையை வீடு முழுவதும் தேடி பார்த்தனர். அப்போது வீட்டின் பின்புறம் இருந்த தொட்டியில் குழந்தை சடலமாக இருந்தது. பிறகு, யாருக்கும் தெரியாமல் குழந்தையை அடக்கம் செய்துள்ளனர். இது பற்றி அறிந்த கிராம நிர்வாக அலுவலர் போலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

பின்னர் போலிஸார் நசுருதீன் வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் அடக்கம் செய்யப்பட்ட குழந்தையின் உடலை வெளியே எடுத்து உடற்கூறு ஆய்வு செய்து பிறகு மீண்டும் அடக்கம் செய்தனர். மேலும் நசுருதீன் வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்காகக் கேரளாவைச் சேர்ந்த மாந்திரிக சாமியாரைச் சந்தித்துள்ளனர்.

அப்போது, அவர் 21 கோழிகள் உயிர் பலி கொடுக்க வேண்டும். இப்படிச் செய்தும் குடும்ப பிரச்சனை தீரவில்லை என்றால் உங்கள் வீட்டில் ஒருவரை நரபலி கொடுக்க வேண்டும் என கூறியதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், நசுருதீனின் ஆறுமாத குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதால் குழந்தையை நரபலி கொடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் போலிஸாருக்கு எழுந்துள்ளது. இதனால் நசுரூதீன் குடும்பத்தில் உள்ள ஏழு பேரிடம் போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: குழந்தையின் தலையைக் கவ்விக்கொண்டு சுற்றிய நாய்.. நரபலி கொடுத்து கொலையா? : மதுரை போலிஸ் தீவிர விசாரணை!