Tamilnadu

“தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு.. பதட்டமடைய வேண்டாம்” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “நைஜீரியாவில் இருந்து தோஹா வழியாக தமிழகம் வந்த நபருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. இதுதான் தமிழகத்தின் முதல் ஒமைக்ரான் பாதிப்பு. அந்த நபர் அறிகுறிகள் அற்றவராக இருக்கிறார்.

அவருக்கு சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடன் வந்த குடும்பத்தினர் 7 பேருக்கும் எடுக்கப்பட்ட மாதிரியிலும் எஸ் ஜீன் இல்லாமல் இருக்கிறது. அதனால் அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களின் மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 7 பேருமே இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள்.

தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று வந்துவிட்டதே என மக்கள் பதட்டமடைய வேண்டாம். மாறாக தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் அக்கறை காட்ட வேண்டும். இதுவரை 15% பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்தாமல் உள்ளனர்.

அவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் ஒமைக்ரானை எதிர்கொள்ள தேவையான மருத்துவக் கட்டமைப்புகள் உள்ளன. 1400 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் கையிருப்பில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொல்லும் அதிர்ச்சி தகவல்!