Tamilnadu

கடந்த ஆண்டை விட சுமார் ரூ.2,000 கோடி அதிக வருவாய்... அசத்தும் பத்திரப் பதிவுத்துறை!

தி.மு.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் பத்திரப்பதிவுத் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய முயற்சிகள் மற்றும் முறைகேடுகளைக் களையும் விதமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் பலனாக துறையின் வருவாய் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இந்த நிதியாண்டில் பதிவுத் துறையின் வருவாய் 10.12.2021 அன்று ரூ.9,000 கோடியை கடந்துள்ளதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

மேலும், பதிவுத்துறையில் மேற்கொள்ளப்படும் சிறப்பு முயற்சிகளின் பயனாக நடப்பு ஆண்டில் ரூ.15,000 கோடி வருவாய் இலக்கு அடையப்படும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்த நிதியாண்டில் மேற்படி இலக்கினை அடைய அனைத்து உதவி பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்களை அரசின் வருவாயை பெருக்குவதில் முழு கவனம் செலுத்துமாறு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிதியாண்டில் 10.12.2021 வரை ஈட்டப்பட்டுள்ள ரூ.9000.36 கோடி வருவாயானது, 2020-21 நிதியாண்டில் டிசம்பர் 2020 முடிய அடைந்த ரூ.7030.59 கோடி வருவாயினை விட ரூ.1969.77 கோடி அதிகமாகும்.

வழிகாட்டி மதிப்புக்கு குறையாமல் ஆவண சொத்துக்களின் மதிப்பை உறுதி செய்தல், ஆவணங்கள் சரியாக இருப்பின் அவற்றைப் பதிவு செய்து உடனடியாக விடுவித்தல், சிறப்பு முயற்சிகள் மேற்கொண்டு தணிக்கை இழப்புகளை வசூலித்தல் முதலான யுக்திகளைக் கையாண்டு ரூ.15,000 கோடி வருவாய் இலக்கை அடைய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Also Read: மக்களே கவனம்: ”ஊரடங்கில்லா தமிழ்நாட்டை உருவாக்க இதுதான் வழி” - அமைச்சர் மா.சு., சொல்லும் முக்கிய தகவல்!