Tamilnadu

“பயங்கர சத்தம்.. கண்ணு முன்னாடியே எரிஞ்சு கிட்டே வெளியே வந்தாங்க” : விபத்தை நேரில் பார்த்தவர் பேட்டி!

குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ அலுவலர்களுக்கான பயிற்சி கல்லூரியில் நடக்க இருந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாட்டின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பங்கேற்பதாக இருந்தது.

இதற்காக கோவை ராணுவ மையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்திற்கு பிபின் ராவத்தும், அவரது மனைவி மதுலிகா ராவத், ராணுவ அதிகாரிகளான பிரிகேடியர் L.S.லிட்டர், லெப்டினன்ட் கர்னல் ஹர்ஜிந்தர் சிங், குருசேவக் சிங், ஜிதேந்திரகுமார், விவேக்குமார், சாய் தேஜா சத்பா என 14 பேர் பயணித்திருக்கின்றனர்.

அப்போது குன்னூர் காட்டுப்பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தற்போது வரை 11 பேர் சடலமாக மீட்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பகீர் தகவலை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த கிருஷ்ண சாமி கூறுகையில், மதியம் 12 போல், வீட்டில் வேலை பார்த்துக்கொண்டிருந்த போது பலத்த சத்தம் கேட்டது. மரம்தான் சாய்கிறது என நினைத்து வெளியே வந்தேன். ஆனால், கரும்புகை மூட்டத்துட்டன் புகுபுகுவென தீ கொளுந்துவிட்டு எரிந்துக்கொண்டிருந்தார்.

அருகில் செல்லமுடியாத அளவிற்கு அனல் அடித்தது. நிறைய மனுசங்க கீழே எரிந்த நிலையில் இறந்துக்கிடந்தாங்க.. அந்த சமயத்தில் என் மனைவியும் அருகில் இருந்தார். உடனே உள்ளூர் போலிஸ் காரர்களுக்கு இதுகுறித்து தகவல் சொன்னோம்.

இந்த சம்பவம் நடந்தபோது புகைமூட்டம் அதிகமாக இருந்தது. அதனால் பெரியதாக என்ன ஆனது என உடனே நினைக்கமுடியவில்லை. தீ சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக எரிந்துக்கொண்டிருந்தது. சிலர் கண்முன்னே எரிஞ்சுகிட்டு வெளியே வந்ததைப் பார்த்ததும் எனக்கு படபடப்பு ஏற்படுவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: மணிக்கு 225கி.மீ வேகம்.. விபத்துக்குள்ளான Mi-17 V5 ரக ராணுவ ஹெலிகாப்டர் குறித்த முக்கிய தகவல்! #EXCLUSIVE