Tamilnadu

கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.50,000 நிவாரணம் : அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50,000 நிவாரணத் தொகை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வந்த சூழலில், ஏராளமானவர்கள் கொரோனாவுக்கு பலியாகினர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என முந்தைய அ.தி.மு.க ஆட்சியிலேயே வலியுறுத்தப்பட்டது. ஆனால், அன்றைய அரசு நிவாரணம் வழங்கவில்லை.

தி.மு.க அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் செயல்படுத்தி வருகிறது. ஆட்சிக்கு வந்த முதல் நாளிலேயே அனைவருக்கும் கொரோனா நிவாரணம் வழங்க உத்தரவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இந்நிலையில், தற்போது கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 50,000 நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நிவாரண நிதியை மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவு பிறப்பித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்து அரசின் நிவாரண உதவி பெற்றவர்களுக்கு இது பொருந்தாது என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: மகளிர் சுயஉதவி குழுக்கள் பெற்ற ரூ.2,576 கோடி கடன் தள்ளுபடி... அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!