Tamilnadu

குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை... தஞ்சாவூரில் அதிர்ச்சி!

கடன் பிரச்னை காரணமாக மகனைக் கழுத்தை நெரித்துக் கொன்று பெற்றோர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் அருகேயுள்ள மேலவெளி மனோ நகரைச் சேர்ந்தவர் ராஜா (38). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். அத்துடன் திருவையாறில் டீக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி கனகதுர்கா (32). மகன் ஸ்ரீவத்சன் (11) 6ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், புதுக்கோட்டையில் வசிக்கும் ராஜாவின் சகோதரர் வினோத்துக்கு வாட்ஸ் அப்பில் வந்த ஆடியோவில் கடன் சுமை காரணமாக தற்கொலை செய்துகொள்வதாக ராஜா கூறியுள்ளார். இதுகுறித்து போலிஸாரிடம் வினோத் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, கள்ளப்பெரம்பூர் போலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்றனர். அப்போது குடும்பத்துடன் ராஜா இறந்து கிடந்தார். மூவரின் உடலையும் கைப்பற்றிய போலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ராஜாவுக்கு தொழிலில் கடன் அதிகரித்ததால், தான் குடியிருக்கும் சொந்த வீட்டை மற்றொவருக்கு விற்றுள்ளார். ஆனால் வீட்டு மீதான வங்கிக் கடன் நிலுவையில் உள்ளதால், விற்பனை செய்த பணம் ராஜாவுக்கு வந்து சேரவில்லை.

இதனிடையே கடன் நெருக்கடி அதிகரித்ததால், ராஜா தனது மகனைக் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு தன் மனைவியுடன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

கடன் பிரச்னை காரணமாக மகனை கொன்று, பெற்றோர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: மகளிர் சுயஉதவி குழுக்கள் பெற்ற ரூ.2,576 கோடி கடன் தள்ளுபடி... அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!