Tamilnadu

விபத்தில் படுகாயமடைந்த ஏழை மாணவனுக்கு சக மாணவர்கள், ஆசிரியர்கள் செய்த உதவி... நெகிழ்ந்துபோன பெற்றோர்!

தருமபுரி அருகே விபத்தில் படுகாயமடைந்த மாணவனின் சிகிச்சைக்காக சக மாணவர்களும், பள்ளி ஆசிரியர்களும் நிதி திரட்டி அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டை அடுத்த கோடியூரை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மனைவி ரஞ்சனி. இருவரும் கூலித்தொழிலாளிகள். இவர்களது மகன் நவீன், (16) பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நவீன் பாலக்கோட்டிலிருந்து வெள்ளிச்சந்தை நோக்கி பைக்கில் சென்றுள்ளார்.

அப்போது அந்த வழியாக வந்த பூ ஏற்றிச்சென்ற வேன் மாணவன் நவீன் மீது மோதியதில், படுகாயமடைந்த நவீன், மேல்சிகிச்சைக்காக கோவையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவச் செலவுக்கு பணமின்றி நவீனின் பெற்றோர் தவித்தனர். இதையறிந்த மாணவர் நவீனுடன் படிக்கும் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவர்களுக்குள் நிதி திரட்டி நேற்று அவரது தாய் ரஞ்சனியிடம் 50 ஆயிரம் ரூபாயை வழங்கினர்.

விபத்தில் படுகாயமடைந்த மாணவனின் சிகிச்சைக்காக உடன் படித்த மாணவர்களும், பள்ளி ஆசிரியர்களும் நிதி திரட்டி அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: எவ்வளவு நீர் பாய்ந்தாலும் நிரம்பாத அதிசய கிணறு... உண்மை என்ன?