Tamilnadu

தந்தை கண்டித்ததால் விபரீத முடிவெடுத்த பள்ளி மாணவன்... கோவை அருகே சோகம்!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை இலுப்பநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கராஜ். இவரது மனைவி உமாமகேஸ்வரி. இந்த தம்பதிக்கு நிகேஷ் என்ற மகன் இருந்தார்.

இவர் தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு அவரது தந்தை ரங்கராஜ் செல்போன் வாங்கி கொடுத்துள்ளார். இதையடுத்து சிறுவன் செல்போனில் அதிகமாக கேம் விளையாடி வந்துள்ளார்.

இதனால் தந்தை ரங்கராஜ் சிறுவன் நிகேஷை கண்டித்துள்ளார். அப்போதும் சிறுவன் தொடர்ந்து கேம் விளையாடி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரங்கராஜ் மகனிடமிருந்து செல்போனை திருப்பி வாங்கியுள்ளார்.

பிறகு மனமுடைந்த சிறுவன் நிகேஷ், வீட்டில் யாரும் இல்லாதபோது சேலையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

அப்போது சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: ”நாங்க விஜிலன்ஸ்ல இருந்து வந்துருக்கோம்” - சாலையில் போனவரை மடக்கி மோதிரத்தை பறித்த மோசடி பேர்வழி!