Tamilnadu

நடிகை புகார் வழக்கு.. அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நீதிமன்றம் சம்மன்!

திருமணம் செய்வதாக ஏமாற்றியதாக நடிகை அளித்த புகாரின் பேரில் தொடரப்பட்ட வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாகவும், கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாகவும், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக நடிகை சாந்தினி கடந்த மே மாதம் புகார் அளித்திருந்தார்.

இந்தப் புகாரில் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமின் பெற்றார்.

இதற்கிடையில் காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் சென்னை சைதாப்பேட்டை 9வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், மணிகண்டனுக்கு எதிராக 341 பக்க குற்றபத்திரிகையை காவல்துறை தாக்கல் செய்தது.

அதுதொடர்பான வழக்கு நீதிபதி மோகனாம்பாள் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு விசாரணைக்கு ஜனவரி 4ஆம் தேதி ஆஜராகும்படி முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.

Also Read: பாலியல் புகாரில் சிக்கிய அதிமுகவின் மணிகண்டன்; பெங்களூருவில் கைது; சிக்கியது எப்படி?