Tamilnadu

சென்னையில் வீடு புகுந்து திருட முயன்ற கொள்ளையன்.. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்.. நடந்தது என்ன?

சென்னை நொச்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் நிர்மல்குமார். இவர் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் நிர்மல்குமார் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பொருட்கள் கீழே விழும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்து எழுந்து பார்த்துள்ளார்.

அப்போது மர்ம நபர் ஒருவர் வீட்டில் இருப்பது தெரிந்தது. இதனால் பதட்டமடைந்த நிர்மல்குமார் கூச்சலிட்டுக் கத்தியுள்ளார். இவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு வந்துப்பார்த்துள்ளனர்.

இதையடுத்து மறைந்திருந்த கொள்ளையனைப் பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதுகுறித்து போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த போலிஸார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.

கொருக்குப்பேட்டைப் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர்தான் நிர்மல்குமார் வீட்டில் திருட முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த ஐந்து செல்போன்கள், பட்டாக்கத்தி, ரூ.2 ஆயிரம் பணம் ஆகியவற்றை போலிஸார் பறிமுதல் செய்து கைது செய்தனர்.

Also Read: ”இனி மருந்துச் சீட்டு இல்லாமல் மாத்திரைகள் வழங்கக் கூடாது” - மருந்தகங்களுக்கு சென்னை போலிஸ் முக்கிய ஆணை!