Tamilnadu

“கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதித்த முத்திரைகள்” : ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு சிறப்புச் செய்தி!

கோவை மாநகரப் பயணத்தின் மூலம் புதிய வரலாறு படைத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் வரிசையில் இருந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ வானதி சீனிவாசனை மேடைக்கு அழைத்து அமர வைத்ததோடு, அவரை நிகழ்ச்சியில் பேசவும் வைத்து தனது பெருந்தன்மையை வெளிப் படுத்தினார்.

இதுபற்றி “தி டைம்ஸ் ஆஃப் இந்தியா” ஆங்கில நாளேட்டில்

“பெரு நகரில் முதல்வர்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது :-

வ.உ.சி பூங்கா மைதானத்தில் நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சியை அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்துவிட்டதால் அவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த இருக்கைகள் காலியாகக் கிடந்தன.

ஆனால், தி.மு.க.வின் “கோவை ஸ்டாலினை வரவேற்கிறது” என்ற ஹேஸ்டேக்குக்கு எதிராக “கோபேக் ஸ்டாலின்” என்ற ஹேஸ்டேக் மூலம் ட்விட்டரில் பா.ஜ.க. போர் நடத்திக் கொண்டு இருந்த போதிலும், அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ.வான திருமதி.வானதி சீனிவாசன் நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தார். அவருக்கு மேடைக்குக் கீழே முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.

முன் வரிசையில் அமர்ந்திருந்த அவரை மேடைக்கு அழைத்து அமரச் செய்ததோடு அவரைப் பேசவும் வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள். சுருக்கமாக உரையாற்றிய திருமதி.வானதி சீனிவாசன் கோயம்புத்தூர் மக்களின் உள்கட்டமைப்புத் தேவைகளை அரசு விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

கவனத்தை ஈர்த்த காட்சி!

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்தகொண்ட நிகழ்ச்சி மேடையின் பின்னணி எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தது. அங்கு இருந்த வைக்காக அல்ல இல்லாதவைக்காக! மேடையின் பின்புறத்தில் முதல் அமைச்சர் அவர்களின் படமோ அல்லது தி.மு.கழகத் தலைவர்களின் படங்களோ காணப்படவில்லை. கடந்த காலங்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் அத்தகைய படங்கள் ஏராளமாக இடம் பெற்று இருந் திருக்கும்.

கி.இராஜமாணிக்கம் ஐ.ஏ.எஸ் (ஓய்வு) இல்லத்தில் முதல்வர்!

திங்கள்கிழமை மாலை திருப்பூரிலிருந்து கோவைக்கு திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 22.11.2021 அன்று கோவை வடவள்ளி அருண் நகரில் தனது மகன் இரா.துர்கா சங்கர் இல்லத்தில் தங்கியிருக்கும் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவருடன் நெருக்கமாக இருந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான முனைவர் கி.இராஜமாணிக்கம் அவர்களைச் சந்தித்து உரையாடினார்.

இரா.மோகன் - ச.விடுதலை விரும்பி ஆகியோரை சந்தித்து நலம் விசாரித்தார்!

அத்துடன் தனது தந்தைக்கு நெருக்கமாக இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும், கட்சியின் மூத்தத் தலைவர்களுமான இரா.மோகன் மற்றும் ச.விடுதலை விரும்பி ஆகியோரின் இல்லங்களுக்கும் சென்று அவர்களைச் சந்தித்துப் பேசினார். இவ்வாறு “தி டைம்ஸ் ஆஃப் இந்தியா” ஆங்கில நாளேடு தனது சிறப்புச் செய்தியில் கூறியுள்ளது.

Also Read: “அனைத்துத் துறைகளிலும் தடம் பதிக்க வலிமையான கட்டமைப்பை உருவாக்கும் தமிழ்நாடு அரசு” : ‘தினகரன்’ நாளேடு !