Tamilnadu

ஓடும் பேருந்தில் காதல் ஜோடியை வெட்டிய உறவினர்கள்... ராமநாதபுரத்தில் வெறிச்செயல்.. 2 பேர் கைது!

ஓடும் பேருந்தில் காதல் ஜோடியை வாளால் வெட்டிய இருவரை போலிஸார் கைது செய்தனர்.

ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் ஜஸ்டின். இவரது மகன் வினித் (22). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகள் பில்கேஸ் (22), என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு சுரேஷ் எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த நிலையில், வேறு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் நடத்த இருந்த நிலையில், நவ.20ஆம் தேதி பில்கேஸ் வீட்டை விட்டு வெளியேறி காதலன் வினித்துடன் கோவை சென்றார்.

அங்கிருந்து இன்று காலை ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலிஸில் பாதுகாப்பு கேட்டு சரண் அடைந்தனர். போலிஸார் இருவருக்கும் திருமணம் செய்த நிலையில், இருவரின் பெற்றோரையும் அழைத்து சமாதானம் பேசினர்.

இதையடுத்து வினித், பில்கேஸ், வினித்தின் தந்தை ஜஸ்டின், தாய் குளோரியா, ஆகியோர் ஊருக்கு அரசுப் பேருந்தில் புறப்பட்டு சென்றனர். மண்டபம் பேருந்து நிலையத்தில் பேருந்து நின்றபோது பேருந்தில் ஏறிய பெண்ணின் அண்ணன் ஆண்டனி மற்றும் உறவினர் யாகப்பா ஆகிய இருவரும் வாள் மற்றும் பிளேடால் பேருந்தில் காதல் ஜோடியையும், தடுத்த ஜஸ்டின், குளோரியா ஆகியோரையும் சரமாரியாக வெட்டினர்.

இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அலறியடித்துக்கொண்டு பேருந்தை விட்டு ஓடினர். பின்னர் அந்த பகுதியில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் யாகப்பா மற்றும் ஆண்டனி ஆகிய இருவரையும் போலிஸாரிடம் பிடித்துக் கொடுத்தனர்.

காயமடைந்த நால்வரும் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். யாகப்பா மற்றும் ஆண்டனி ஆகிய இருவரையும் கைது செய்த மண்டபம் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Also Read: யூடியூப் பிரபலம் 'டாடி' ஆறுமுகத்தின் மகன் உட்பட 3 பேரை கைது செய்த புதுச்சேரி போலிஸ்... நடந்தது என்ன?