Tamilnadu

முதலமைச்சரின் படம் இல்லாமல் நடைபெற்ற அரசு விழா.. மு.க.ஸ்டாலின் பங்கேற்ற விழாவில் இதை கவனித்தீர்களா?

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோயம்புத்தூர் வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், 587.91 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 70 முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்து, 89.73 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 128 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முன்னதாக இந்நிகழ்வில் பங்கேற்க வந்த முதலமைச்சருக்குச் சாலையில் இரு பக்கமும் நின்றிருந்த பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

பொதுவாக முதலமைச்சர் ஒரு மாவட்டத்திற்கு வருகிறார் என்றால் அவரை வரவேற்கும் விதமாகப் பேனர்கள், கட்அவுட்டுகள் வைக்கப்படுவது வழக்கம். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் சாலைகளை மறித்து பேனர்கள் வைக்கப்பட்டதை நாம் அதிகம் பார்த்திருப்போம்.

பேனர்கள் மூலமாக ஏற்படும் விபத்துகளை தவிர்க்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது தி.மு.க தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த வேண்டுகோளை அடுத்து முதலமைச்சர் வருகையை ஒட்டி சாலையில் எங்கும் வரவேற்பு பேனர்கள் மற்றும் கட்அவுட்டுகள் எதுவும் வைக்கப்படுவதில்லை.

அதேபோல் அரசு நிகழ்வுகள் என்றால் விழா மேடையில் இருக்கும் பேனரில் முதலமைச்சர் படம் இடம்பெறுவது வழக்கம். ஆனால், தற்போதைய அரசு விழாக்களில் முதலமைச்சரின் படம் கூட இடம்பெறுவதில்லை.

இன்று கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படம் இடம்பெறவில்லை. தமிழ்நாடு அரசின் சின்னமும், அவரின் பெயரும் மட்டுமே இடம் பெற்றிருந்தது.

இந்த மாற்றங்களைப் பார்த்து பொதுமக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசைப் பாராட்டி வருகிறார்கள். முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை வருவதையொட்டி #KovaiWelcomesStalin என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “அனைத்து மாவட்ட மக்களும் என் மக்கள்தான்...எந்த வேறுபாடும் கிடையாது” - கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!