Tamilnadu

விபரீதமான கடைசி ஆசை : கணவனை உயிருடன் புதைத்த மனைவி - விசாரணையில் வெளிவந்த ‘பகீர்’ தகவல்!

சென்னையை அடுத்த பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி லட்சுமி. இவர்களது மகன் ராஜேஸ்வரன் துபாயில் பணியாற்றி வருகிறார். தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் மகள் தமிழரசி தாய் தந்தையுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி இரவு நாகராஜுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அப்போது தனது மனைவி லட்சுமியிடம், தான் ஜீவ சமாதி ஆகவேண்டும் எனக் கூறி அதற்காகத் தோண்டி வைத்திருந்த பள்ளத்தைக் காட்டியுள்ளார்.

இதையடுத்து மனைவி லட்சுமி, கணவனின் கடைசி ஆசையை நிறைவேற்றும் விதமாக, கணவனை உயிருடன் பள்ளத்தில் படுக்க வைத்து மூடியுள்ளார். பின்னர் வேலைக்குச் சென்ற மகள் அடுத்த நாள் காலை வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது தந்தை எங்கே என தாயிடம் கேட்டுள்ளார். இதற்கு லட்சுமி வெளியே சென்றுள்ளதாகக் கூறியுள்ளார். இதனால் அவர் பெரிதாக எதுவும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் இரண்டு நாட்களாகத் தந்தையைக் காணாததால் அதுகுறித்து தாயிடம் கேட்டுள்ளார்.

அப்போதுதான் நடந்த சம்பவத்தை மகளிடம் கூறியுள்ளார் லட்சுமி. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

பின்னர், நாகராஜ் உயிருடன் புதைக்கப்பட்ட இடத்திற்குச் சென்ற போலிஸார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் மனைவி லட்சுமியிடம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவன் சத்தியம் வாங்கியதால் உயிருடன் கணவனை மனைவி புதைத்த சம்பவம் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Also Read: இளம்பெண்ணின் கழுத்தில் சிக்கிய 7.5 செ.மீ தையல் ஊசி.. உயிரைக் காப்பாற்றிய கோவை அரசு மருத்துவமனை!