Tamilnadu

வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.76.50 லட்சம் மோசடி.. கைது அச்சத்தில் முன்னாள் அமைச்சர் சரோஜா - தீவிர விசாரணை!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் புதுப்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க மேலாளர் குணசீலன். இவர் அ.தி.மு.க முன்னாள் சமூகநலத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜாவின் உறவினர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் முன்னாள் அமைச்சர் சரோஜா மீது ராசிபுரம் போலிஸில் மோசடி புகார் அளித்துள்ளார்.

அதில் சரோஜா அமைச்சராக இருந்த போது, சத்துணவு திட்டத் துறையில் வேலை வாங்கி தரக்கோரி 15 பேர் தன்னிடம் 76.50 ரூபாய் லட்சம் கொடுத்தார்கள். அந்த தொகையை சரோஜா மற்றும் அவரது காணவர் லோகரஞ்சனிடம் கொடுத்தேன். ஆனால் யாருக்கும் வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை என கூறியிருந்தார். அதன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலிஸார் முன்னாள் அமைச்சர் சரோஜா அவரது கணவர் லோகரஞ்சன் ஆகியோர் மீது மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு சரோஜா மற்றும் அவரது கணவர் லோகரஞ்சன் ஆகியோர் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். ஏற்கனவே இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணை மீண்டும் நீதிபதி குணசேகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, சரோஜா மற்றும் அவரது கணவர் லோகரஞ்சன் ஆகியோர் சார்பில் முன் ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டார்.

இந்த நிலையில் முன் ஜாமீன் கோரி சரோஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, பதில் அளிக்க கால அவகாசம் கேட்டுக்கொண்டார். இதையடுத்து வழக்கு விசாரணையை அடுத்த வாரம் புதன்கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காவல்துறை தரப்பில் இருந்து விசாரணை தீவிரமாகியுள்ளதாக கைது அச்சத்தில் சரோஜா இருப்பதாக அதிமுக வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது. முன்னதாக அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 17 பேரிடம் ரூ.35 லட்சத்தை மோசடி செய்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சரோஜாவின் உறவினரை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 35 லட்சம் ரூபாய் பணமோசடி” : அ.தி.மு.க முன்னாள் அமைச்சரின் உறவினர் கைது!