Tamilnadu

பிரபல எழுத்தாளர், இயக்குநர் கோவி.மணிசேகரன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனர் கோவி.மணிசேகரன் வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார்.

தமிழ் எழுத்துலகில் பொன்விழா கண்டவரும், திரைப்பட இயக்குநருமான கோவி.மணிசேகரன் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில், “தமிழ் எழுத்துலகில் பொன்விழா கண்டவரும், திரைப்பட இயக்குநருமான கோவி.மணிசேகரன் தனது 96-ஆவது வயதில் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதினங்கள் படைப்பதில் ஆர்வமும், ஆற்றலும் நிறைந்த அவர் மறைந்த 'இயக்குநர் இமயம்' கே.பாலச்சந்தர் அவர்களிடம் 21 ஆண்டுகளுக்கு மேல் உதவி இயக்குநராக பணியாற்றியவர். தமிழ் எழுத்துலகில் தனி முத்திரை பதித்த அவர் திரைப்பட இயக்குநராகவும் புகழ் பெற்றவர். சாகித்ய அகாதமி விருது பெற்ற அவர், நாடகங்கள், சிறுகதை தொகுப்புகள், சமூக, வரலாற்றுப் புதினங்கள் எழுதி 50 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் எழுத்துலகிற்கு பெருமை சேர்த்தவர்.

அவர் எழுதிய “குற்றால குறவஞ்சி” என்ற வரலாற்றுப் புதினம், இயக்கிய “தென்னங்கீற்று” திரைப்படம் ஆகியவை இன்றும் அவர் பெயர் சொல்லுகின்றன. தமிழ் எழுத்துலகம் ஒரு மாபெரும் எழுத்தாளரை இழந்து தவிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் தமிழ் எழுத்துலகத்திற்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: ”மக்களின் உணர்வுகளுக்கு ஏற்ப செயல்படுகிறார் மக்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின்” - அமைச்சர் எ.வ.வேலு புகழாரம்!