Tamilnadu

“விவசாயிகளை கண் போல காப்போம்... விரைவில் நிவாரணம் வழங்கப்படும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

திருவாரூர் மாவட்டத்தில் தொடர் கனமழையால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட திருத்துறைப்பூண்டி தாலுகாவில் உள்ள ராயநல்லூர் மற்றும் புழுதிக்குடி ஆகிய பகுதியில் விவசாய நிலங்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து பின்னர் விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றார்.

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டு மனைப் பட்டா, கூரை வீடு பகுதி சேதம், கால்நடை இறப்பு, உள்ளிட்ட 12 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் மன்னார்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கனமழை காரணமாக தமிழக அரசின் நடவடிக்கைகளை அறிந்து இருப்பீர்கள்.

முதல்வராகிய நான், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரின் நடவடிக்கைகள் காரணமாக பெரும் சேதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.

நீர்வளத்துறை, ஊரக உள்ளாட்சி துறை சார்பில் நீரை வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளேன். ஆட்சிக்கு வந்த உடன் டெல்டா மாவட்டங்களில் 4000 கி.மீ தூர் வாரப்ப்ட்டது. இதனால் மழைநீர் பெருமளவில் தேங்காமல் தடுக்கப்பட்டது.

உழவர்களை கண் போல் பாதுகாக்கும் அரசு தி.மு.க அரசு. 68 ஆயிரம் ஹெக்டேர் பரப்பிலான விவசாய நிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த நான்கு மாதங்களில் ஏராளமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. முன்னறிவிப்பு இன்றி செம்பரம்பாக்கம் ஏரி திற்ககப்டடதால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு போல் மீண்டும் நடக்கக் கூடாது என்ற வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

சென்னையில் இதுவரை 400 இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. தி.மு.க அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெருமளவு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க பட்டுள்ளது. அ.தி.மு.க அரசு செயல்பட்ட விதத்தை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். தமிழக அரசு நிரந்தர தீர்வை எடுத்துவருகிறது.

சென்னை பெருநகர வெள்ள மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு புவியியல் அமைப்பு தொடர்பான ஆய்வு செய்து அறிக்கை தரும்.

டெல்டா மாவட்டங்களில் வெள்ள தடுப்பை தடுக்க நிரந்தர தீர்வு எடுக்கப்படும். டெல்டா மாவட்டங்களை பொறுத்தவரை தூர் வாரும் பணி நடைபெற்று காரணமாக தான் பெருமளவு சேதம் தடுக்கப்பட்டுள்ளது. பயிர் காப்பீடு நீட்டிப்பு தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து எந்த வித பதிலும் இதுவரை வரவில்லை.” எனத் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது டி.ஆர்.பாலு எம்.பி, அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எஸ்.ரகுபதி, அர.சக்கரபாணி, சிவ.வீ.மெய்யநாதன் மற்றும் திருவாரூர் தி.மு.க மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்பி.ராஜா, நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் தமிழக டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Also Read: “குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்.. பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வோம்”: முதலமைச்சர்