Tamilnadu

தென்பெண்ணை ஆற்றில் தரமற்ற முறையில் கட்டிய தடுப்பணை உடைப்பு - அ.தி.மு.க அரசின் டெண்டர் ஊழல் அம்பலம்!

விழுப்புரம் மாவட்டம், தளவனூரில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அ.தி.மு.க ஆட்சியின் போது ரூ.25 கோடி செலவில் அக்டோபர் 2020ம் ஆண்டு தடுப்பணை கட்டப்பட்டது. இந்த தடுப்பணையை அப்போதைய சட்டத்துறை சி.வி. சண்முகம் திறந்துவைத்தார்.

இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் தடுப்பணையின் ஒரு பகுதி திடீரென உடைந்து, அருகே இருந்த பாசன வாய்க்கால்களில் தண்ணீர் புகுந்தது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். பிறகு தடுப்பணையின் உடைப்பு சீரமைக்கப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் நேற்று தடுப்பணையின் இரண்டாவது பக்கத்திலும் உடைப்பு ஏற்பட்டு நீர் வெளியேறி வருகிறது. இது குறித்து அறிந்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உடனடியாக சென்று தடுப்பணையில் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தளவனூர் தடுப்பணை கடந்த ஓராண்டுக்கு முன்பு அ.தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்டது. ஜனவரி மாதம் அணையின் மறுபுறம் உடைந்தது. தற்போது மீண்டும் உடைந்துள்ளது.

ஓராண்டில் மட்டும் இரண்டு முறை தடுப்பணை உடைந்துள்ளது. அ.தி.மு.க ஆட்சிக்கு இந்த தடுப்பணையே சான்று. மேலும். தடுப்பணையை முழுமையாக சீரமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சென்னை கே.பி. பார்க் குடியிருப்புகளைத் தரமற்ற முறையில் கட்டிய பி.எஸ்.டி நிறுவனம் தான் இந்த தடுப்பணையையும் கட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அடுக்குமாடிக் குடியிருப்புகளை அடுத்து தடுப்பணைகளையும் தரமற்ற முறையில் கட்டியிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “வீடியோ எப்போ சார் ரிலீஸ் பண்ணுவீங்க?”: அண்ணாமலையை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்- ட்ரெண்டாகும் #GoatonBoat