Tamilnadu

கனமழையில் அரசு இயந்திரத்தை ஒருநொடியும் தாமதம் இல்லாமல் இயக்கும் முதல்வர்: நம்பிக்கை விதைக்கும் திமுக அரசு

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணிகளை உடனடியாக செய்திட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கனமழை பயமுறுத்தினாலும், அரசு இயந்திரம் நம்மோடு இருக்கிறது என்ற நம்பிக்கை பொதுமக்களுக்கு ஓர் உந்து சக்தியாய் உள்ளது என ‘தினகரன்’நாளேடு 8.11.2021 தேதியிட்ட இதழில் `மீண்டும் வெள்ளம்’ என்ற தலைப்பில் தலையங்கம் வெளியிட்டுள்ளது.

அது பற்றிய விவரம் வருமாறு:-

கொரோனா பாதிப்பில் இருந்து ஓரளவுக்கு மீண்டு விட்ட தமிழகத்திற்கு பருவ மழை மற்றுமொரு பேராபத்தை உருவாக்கி நிற்கிறது. தமிழகத்தில் கடந்த 26ம் தேதி வடகிழக்கு பருவ மழை தொடங்கி விட்டது. இவ்வாண்டு தொடக்கம் முதலே நல்ல மழையை காண முடிகிறது. தீபாவளி பண்டிகையை ஒட்டி தென் மாவட்டங்களில் கன மழை கொட்டித்தீர்த்தது. இப்போது சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை சுழன்று அடிக்கிறது.

2015க்கு பின்னர் கன மழையை தமிழகத்தின் தலைநகர் இப்போது எதிர் கொண்டுள்ளது. விடிய விடிய கொட்டி வரும் மழையால் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்துள்ளது. செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் உள்ளிட்ட ஏரிகள் நிரம்பிவிட்ட நிலையில், உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கூவம், அடையாறு, கொசஸ்தலை ஆறுகளில் வெள்ளம் வர தொடங்கியுள்ளது.

வானிலை ஆய்வு மையம் சென்னைக்கு ரெட்அலர்ட் விடுத்துள்ள சூழலில், அடுத்த 3 தினங்களுக்கு கனமழை பெய்யும் என்பதால் சென்னை வாசிகள் அச்சத்தில் உள்ளனர். திரும்பிய திசையெல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிப்பதால், போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், தமிழக அரசின் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளும் மக்கள் பாராட்டும் வகையில் உள்ளது.

நவம்பர், டிசம்பர் மாதங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்த நிலையில், கடந்த மாதமே தமிழக அரசு வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளில் களமிறங்கி விட்டது. இப்பணிகளுக்காக மாவட்டத்திற்கு ஒரு அமைச்சரை நியமனம் செய்ததோடு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தி தேவையான உத்தரவுகளை பிறப்பித்தார். தமிழகத்தில் கடந்த 6 தினங்களில் இயல்பைவிடவும் கூடுதலாக 40 சதவீதம் மழை பெய்துள்ளது. வெள்ள தடுப்புக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் முகாமிட்டுள்ள அமைச்சர்கள் பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகின்றனர்.

சென்னையில் தற்போது பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதல்வரே நேரில் களமிறங்கி பார்வையிட்டு வருகிறார். மாநகராட்சி அதிகாரிகளை அவர் முடுக்கி விட்டு, மழைநீர் தேங்குவதை அகற்றும் பணிகளை வேகப்படுத்தி வருகிறார்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மீட்பு பணிகளுக்காக அரசு இயந்திரம் முழுவீச்சில் இயங்குகிறது. வெள்ள பாதிப்பு மற்றும் உதவிகளுக்காக தொலைபேசி எண்கள் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு, துரித நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னையில் கன மழையை கருத்தில் கொண்டே தீபாவளி விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்புவோர் பயணத்தை தள்ளி வைக்குமாறு தமிழக முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை உடனடியாக செய்திடவும் எம்.பி. எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். கனமழை ஒருபக்கம் பய முறுத்தினாலும், அரசு இயந்திரம் நம்மோடு இருக்கிறது என்ற நம் பிக்கை பொதுமக்களுக்கு ஓர் உந்து சக்தியாய் உள்ளது. இவ்வாறு ‘தினகரன்’ தலையங்கத்தில்குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: பருவமழை முன்னெச்சரிக்கைகளை கண்காணிக்க 12 மாவட்டங்களுக்கு IPS அதிகாரிகள்.. அதிரடி ஆக்‌ஷனில் முதல்வர்!