Tamilnadu

"டெங்கு பரவல் அதிகரிக்கிறதா?” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொல்வது என்ன?

மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறைந்த அளவிலேயே இருப்பதாகவும், டெங்கு பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் உள்பட 9 மாநிலங்களில் டெங்கு பாதிப்பு குறித்து கண்டறிய ஒன்றிய சுகாதாரத்துறையின் உயர்நிலைக் குழு ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி, தமிழகம் விரைந்த 3 பேர் கொண்ட ஒன்றிய சுகாதாரக்குழுவினர் சென்னையில் மக்கள் நல்வழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் டெங்கு பாதிப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்து, அதனை கட்டுப்படுத்துவது, சிகிச்சை அளிப்பது தொடர்பாகவும் ஆலோசனை செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், “ஒன்றிய அரசின் குழு சென்னை வந்துள்ளது. பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து டெங்குவை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட பல்வேறு கட்டங்கள் தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொண்டோம்.

டெங்கு பாதிப்பு அதிகமுள்ள 9 மாநிலங்களில் தமிழகத்தில்தான் குறைவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் டெங்கு பரவாமல் கட்டுக்குள் இருக்க, மக்கள் நல்வாழ்வுத்துறை கூடுதலாக முயற்சி எடுத்து வருகிறது.

மத்திய குழு ராணிப்பேட்டையில் டெங்கு சிகிச்சை முறையை ஆய்வு செய்து, சிறப்பான முறையில் தயார் செய்து இருப்பதாக தெரிவித்தனர். நாளை இந்த குழுவினர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டெங்கு பாதித்தவர்களை நேரில் சென்று பார்க்கவுள்ளனர்” எனத் தெரிவித்தார்.

Also Read: கொட்டும் மழையில் ஆய்வு பணி.. 2வது நாளாக களத்தில் நின்று மக்களுக்கு உதவிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!