Tamilnadu

மின்சார கம்பியில் சடலமாக தொங்கிய இளைஞர்.. சாலை விபத்தில் நண்பர்களுக்கு நேர்ந்த கதி - அதிர்ச்சி சம்பவம்!

மதுரை மாவட்டம் பெருங்குடி விமான நிலையம் பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ். அதே பகுதியைச் சேர்ந்த அஜித் கண்ணன் மற்றும் காமராஜ் ஆகியோர் 10 நண்பர்களுடன் கொடைக்கானல் சென்றுவிட்டு இரு சக்கர வாகனங்களில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

நிலக்கோட்டையை அடுத்த சிலுக்குவார்பட்டி அருகே ஒருவர் பின் ஒருவராக வேகமாக வந்துள்ளனர். அப்போது சிவங்கையில் இருந்து பண்ணைக்காடு நோக்கி அதிவேகமாக வந்த கார் மீது காமராஜ் ஓட்டி வந்த பைக் மோதியுள்ளது.

அதில் காமராஜ் காருக்கு மேலே பறந்து சென்று சாலையின் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேபோல் பின்னால் அமர்ந்திருந்த அஜித் கண்ணன் கார் மோதிய வேகத்தில், தூக்கி எறியப்பட்டு சாலையின் நடுவே சென்ற மின்கம்பத்தின் மின்சாரக் கம்பியில் சிக்கி உயிரிழந்தார்.

இதில் அஜித் கண்ணனின் உடல் மின்சாரக் கம்பியிலேயே தொங்கிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்களின் நண்பர் கதறி அழுதனர். மேலும் இச்சம்பவம் அறிந்து வந்த நிலக்கோட்டை போலிஸார், சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “100 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; குழந்தை உட்பட 3 பலி” : கொடைக்கானல் அருகே நடந்த சோக சம்பவம்!